'அனபெல் சேதுபதி' இயக்குநர் மீது என்னால் பந்தயம் கட்ட முடியும்: சி.எஸ்.அமுதன்

'அனபெல் சேதுபதி' படத்தின் இயக்குநருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ஜெகபதி பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அனபெல் சேதுபதி'. இந்தப் படம் திரையரங்க வெளியீட்டைத் தவிர்த்து ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதேபோல், 'அனபெல் சேதுபதி' படத்தைப் பார்த்துவிட்டுப் பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். அதிலும் விஜய் சேதுபதியை மிகவும் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவுகளைக் காண முடிந்தது.

தற்போது 'அனபெல் சேதுபதி' பார்த்துவிட்டு இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

" 'அனபெல் சேதுபதி' பார்த்தேன். பாராட்டவும் அதே நேரம் மிக மோசமான விஷயங்கள் பல படத்தில் இருந்தன. ஆனால், இயக்குநர் அவரது திறனை இன்னும் வளர்த்துக் கொள்வார் என்றும், எதிர்காலத்தில் படைப்பாற்றல் திறனில் தவிர்க்கமுடியாத சக்தியாக இருப்பார் என்றும் என்னால் பந்தயம் கட்ட முடியும்.

ஏனென்றால் அவரிடம் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. எனக்கு அவரைத் தெரியாது. நான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் இல்லை. ஆனால், சகோதரா தொடர்ந்த திரைப்பட இயக்கத்தில் முயற்சிகளைத் தொடருங்கள்".

இவ்வாறு சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.

'தமிழ்ப் படம் 2' படத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் சி.எஸ்.அமுதன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE