மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி 

By செய்திப்பிரிவு

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் உள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிசாசு 2'. இதில் விஜய் சேதுபதி கவுரவ கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். ராக்போர்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மிஷ்கினிடம் பணிபுரிய ஆவலாக இருப்பதாக விஜய் சேதுபதி அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதில் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:

"மிஷ்கின் பல பேட்டிகளில் குரோசோவோவுடன் 10 ஆண்டுகள் பயணித்தேன் என்று சொல்லியிருப்பார். எப்படிப் பயணித்தார் என்று எண்ணும்போது, திருவள்ளுவர் இப்போது இல்லை. ஆனால் குறள் வழியாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைப் போன்ற உறவுதான் குரோசோவோ - மிஷ்கின் உடையது.

இதனை 'சைக்கோ' படம் பார்த்த போது உணர்ந்தேன். குரோசோவாவுடன் அந்தளவுக்குப் பயணப்பட்டுள்ளார். உண்மையில் 'சைக்கோ' பார்த்துப் பிரமித்துப் போய்விட்டேன். படத்தின் ஒவ்வொரு ஷாட்டுமே கதை சொன்னது. படம் மிகவும் பிடித்திருந்தது. ஒரு நாள் இயக்குநர் மிஷ்கினை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தேன். அப்போது சந்திக்கலாமா என்றதும் 'வா கண்ணம்மா' என்று அழைத்தார்.

'பிசாசு-2' கதையைச் சுருக்கமாகச் சொன்னார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதை சொல்லும்போது சினிமா கலைஞனாகப் பெருமிதம் அடைந்தேன். நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம். அதுவும் சீக்கிரமாகப் பண்ணுவோம் என்றேன்.

'பிசாசு 2' படத்தில் எனக்காக ஒரு பிரத்யேகமாக சிறிய கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். "உங்கள் சிந்தனையில் நான் படம் பண்ணனும். நான் ரெடியாக இருக்கிறேன். உங்களுடன் படம் பண்ணும்போது சினிமாவை மேலும் கற்றுக்கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளேன்."

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE