'பொன்னியின் செல்வன்' அப்டேட்: கார்த்தியின் படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

'பொன்னியின் செல்வன்' படத்தில் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காகப் பலரும் நீளமாகத் தலைமுடியை வளர்த்திருப்பதால், இதர படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார்கள். இதனால் மணிரத்னமும் சரியாகத் திட்டமிட்டு, இரண்டு பாகங்களுக்கான காட்சிகளையும் ஒவ்வொரு நடிகருக்கும் முடித்துக் கொண்டே வந்தார்.

சமீபத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ரஹ்மான் ஆகியோர் தங்களுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டார்கள். தற்போது கார்த்தி தனது காட்சிகளை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார்.

இது தொடர்பாக கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இளவரசி த்ரிஷா, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. ஜெயம் ரவி இளவரசேசசசச.. என் பணியும் முடிந்தது!"

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால், நாளை (செப்டம்பர் 18) முதல் முத்தையா இயக்கத்தில் உருவாகும் 'விருமன்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் கார்த்தி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE