வடிவேலு - சுராஜ் இணையும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'?

By செய்திப்பிரிவு

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள படத்துக்கு 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' எனத் தலைப்பு வைக்கப் படக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, மீண்டும் உற்சாகமாகக் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள 5 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் முதல் 2 படங்களில் நாயகனாகவும், பின்பு முழுக்க காமெடியனாகவும் நடிக்கவுள்ளதாக வடிவேலு தெரிவித்துள்ளார்.

இதில் சுராஜ் - வடிவேலு இணையும் படம் முதலில் தொடங்கவுள்ளது. இதில் வடிவேலுவுக்கு நாயகி இல்லை என்றாலும், படத்தில் முன்னணி நாயகி ஒருவர் நடிக்கவுள்ளார். மேலும், படத்தில் வடிவேலுவுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் நடிக்கவுள்ளது.

இந்தப் படத்துக்கு 'நாய் சேகர்' என்று தலைப்பு முடிவு செய்து பேட்டிகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் ஆகியவற்றில் தெரிவித்து வந்தது படக்குழு. ஆனால், ஏஜிஎஸ் நிறுவனம் தாம் தயாரித்து வரும் படத்துக்கு 'நாய் சேகர்' எனத் தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுவிட்டது. பலரும் பேச்சுவார்த்தை நடத்தியும், 'நாய் சேகர்' தலைப்பு உரிமையை விட்டுக்கொடுக்க ஏஜிஎஸ் நிறுவனம் மறுத்துவிட்டது.

இதனால், சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள படத்துக்கு 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' எனத் தலைப்பு வைக்க ஆலோசனை நடத்தி வருகிறது படக்குழு. தற்போது இந்தத் தலைப்புக்கான ஒப்பந்தப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். விரைவில் இந்தத் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைக் காணலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE