பரபரப்பை உருவாக்குவதற்காக சமூக ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று நடிகர் அனில் கபூர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கும் பாலிவுட் நட்சத்திரங்களில் ஒருவர் அனில் கபூர். தான் உடற்பயிற்சி செய்யும் காணொலி, குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், அண்ணன் மகன் அர்ஜுன் கபூருடன் விளையாட்டு எனப் பல விஷயங்களை அவ்வப்போது பதிவிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் பின்ச் சீஸன்- 2 என்கிற நிகழ்ச்சியில் அனில் கபூர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சி க்யூப்ளே யூடியூப், ஜீ5 மற்றும் மை எஃப் எம் தளங்களில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இதை இயக்குநர், நடிகர் அர்பாஅஸ் கான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில், சமூக ஊடகத்தின் சக்தியைக் குறித்தும், ரசிகர்களுக்கான அறிவுரை என்ன சொல்வீர்கள் என்றும் அனில் கபூரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கபூர், "பொறுப்பற்ற முறையில் செயல்படாதீர்கள். சமூக ஊடகத்தை நேர்மறையாகப் பயன்படுத்துங்கள். ஏனென்றால் நேர்மறை சிந்தனைகளை, அன்பைப் பரப்ப அது ஒரு சிறந்த தளமாக இருக்கும். எதிர்மறை விஷயங்களைப் பேசி, பரபரப்புக்காக அதைப் பயன்படுத்தாதீர்கள். ஒரு விஷயத்தைப் பற்றிய சரியான அறிவு இல்லையென்றால் ஏன் அதைப் பற்றி கருத்து கூற வேண்டும்? அதற்கு அமைதியாக நாம் நம் வேலையைப் பார்ப்பதே சிறந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 15ஆம் தேதி அனில் கபூர் பங்கேற்ற பகுதி வெளியாகிறது.