எனக்கு நடனக் குரு பாக்யராஜ் சார்: மிர்ச்சி சிவா

By செய்திப்பிரிவு

எனக்கு நடனத்தில் குரு பாக்யராஜ் சார் தான் என்று மிர்ச்சி சிவா தெரிவித்தார்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'முருங்கைக்காய் சிப்ஸ்'. ஸ்ரீஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, பாக்யராஜ், ஊர்வசி, யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தரண் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் மிர்ச்சி சிவா பேசியதாவது:
"இந்தப் படத்தில் மிகவும் பிடித்தது தலைப்பு தான், இதற்கு நிறைய அர்த்தம் இருக்கிறது. தயாரிப்பாளருக்கு சிப்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று நினைக்கிறேன். சாந்தனு எல்லா நேரத்திலும் கூப்பிடுவார். ஆனால் ஏனோ இன்று கூப்பிடவே இல்லை. அவர் மிகவும் திறமையானவர், அவருக்கான நேரம் வரும். இரண்டு வருடங்களாக அவருக்கு எந்தப்படமும் வரவில்லை என்றார். உலகத்திலேயே எந்தப்படமும் வரவில்லை. அதனால் அவர் கவலைப்பட வேண்டாம்.

நாயகி நன்றாக நடித்திருக்கிறார். பாண்டியராஜ் சார் பாக்யராஜ் சார் பற்றி ஒரு கதை சொன்னார். ஒரு படம் எடுக்கும் நேரத்தில் வேறொரு படத்தின் சாயல் தெரிய, ஒரே இரவில் அவர் தயார் செய்த கதை தான் ‘இன்று போய் நாளை வா’ என்றார், எனக்குப் பிரமிப்பாக இருந்தது. அதனால் தான் அவர் இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதையாளராக கொண்டாடப்படுகிறார்.
எனக்கு நடனத்தில் குரு பாக்யராஜ் சார் தான். அவருடனும் சாந்தனுவுடனும் இணைந்து ஒரு படத்தில் நடனம் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் நன்றி"

இவ்வாறு மிர்ச்சி சிவா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE