கரோனா நிறைய கற்றுக் கொடுத்துவிட்டது: மிர்ச்சி சிவா

By செய்திப்பிரிவு

கரோனா நிறைய கற்றுக் கொடுத்துவிட்டது என்று இடியட் பத்திரிகையாளர் சந்திப்பில் மிர்ச்சி சிவா தெரிவித்தார்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'இடியட்'. ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, ரவிமரியா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 17-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படம் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் மிர்ச்சி சிவா பேசியதாவது:

"இரண்டு வருடங்கள் கடந்து எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்த கரோனா நிறையக் கற்றுக்கொடுத்துவிட்டது. கரோனா உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் ராம்பாலா சார் இந்தப் படத்தை பற்றிச் சொன்னார், ஆனால் அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவரையும் ஒன்று சேர்த்துப் படத்தைத் துவக்கி விட்டார் தயாரிப்பாளர் சுந்தர். அவரது வாழ்வைக் கேட்டால் பிரமிப்பாக இருக்கும்.

ஒளிப்பதிவாளர் ராஜா எப்போதுமே சிரித்த முகமாக இருப்பார். நிக்கி கல்ராணி போல அர்ப்பணிப்பு கொண்ட நடிகையை, பார்க்க முடியாது ஒரு காட்சியில் அவர் இறந்தவராக இருக்க வேண்டும் ஆனால் அதற்கே நிறையச் சந்தேகங்கள் கேட்டார். அந்தளவு சீரியஸான நடிகை. நடிகர் ஆனந்த்ராஜ் உலகத்தில் எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம் ஆனால் நடிப்பில் அசத்திவிடுவார்.

மயில்சாமி பிரமிப்பு தரும் மனிதர் தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களுக்கு, அவர் செய்யும் கொடைகள் பெரிது. அவரிடம் பெரிய மரியாதை உள்ளது. டீம் கேப்டன் நன்றாக இருந்தால் தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும் எங்கள் டீமிலேயே பெரிய ‘இடியட்’ ராம்பாலா சார் தான். உண்மையிலேயே அவரின் உழைப்பு அவர் அமைக்கும் காட்சிகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இன்னும் நிறையப் படங்கள் அவர் செய்ய வேண்டும்.

தியேட்டரில் தான் இந்தப்படத்தை வெளியிட வேண்டும் என்றார் தயாரிப்பாளர், அவரின் நம்பிக்கைக்கு நன்றி. ஒரு பேய் எப்போதும் இருட்டில், மியூசிக்கில் பயமுறுத்தும் ஆனால் அது இந்தப்படத்தில் இருக்காது. அதனால் தான் இந்தப்படத்தை ஒப்புக்கொண்டேன். படத்தின் ரகசியத்தைச் சொல்லிவிட்டேன் ஆனாலும், இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் நன்றி”

இவ்வாறு மிர்ச்சி சிவா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE