மக்கள் விரும்பினால் அரசியலைப் பற்றி யோசிப்பேன்: கங்கணா பேட்டி

By செய்திப்பிரிவு

மக்கள் விரும்பினால் அரசியலைப் பற்றி யோசிப்பேன் என்று நடிகை கங்கணா கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் ‘தலைவி’ படத்தின் புரோமோஷனுக்காக ஒரு யூடியூப் சேனலுக்கு கங்கணா பேட்டியளித்துள்ளார். அதில் தனது அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறியிருப்பதாவது:

''இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. களத்தில் நிற்காமல் ஒருவரால் ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் கூட வெற்றிபெற முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். மக்கள் உங்களைப் பார்க்க வேண்டும். ஒருவர் அரசியலில் நுழைய வேண்டுமென்றால் மக்களின் உண்மையான நன்மதிப்பைப் பெற வேண்டும். மக்கள் விரும்பினால் அரசியலைப் பற்றி யோசிப்பேன். மக்களுடன் இணைந்திருந்ததாலும், தன்னால் சாத்தியமான அனைத்து வழிகளிலும் அவர்களுக்கு உதவியதாலும்தான் இறந்து இத்தனை வருடங்கள் ஆகியும் மக்கள் ஜெயா அம்மாவை நேசிக்கிறார்கள்''.

இவ்வாறு கங்கணா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE