ஒரு நாளைக்கூட சுலபமாகக் கடக்க முடியவில்லை: மறைந்த தோழி குறித்து யாஷிகா உருக்கம்

By செய்திப்பிரிவு

விபத்தில் மரணமடைந்த தனது தோழி குறித்து நடிகை யாஷிகா உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டைக் கவிழ்ந்து கடும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் கால் ஆகியவற்றில் எலும்புகள் உடைந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா தற்போது சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தனது தோழியின் மரணம் குறித்து அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவுகளை யாஷிகா வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று யாஷிகா பதிவிட்டுள்ளதாவது:

''என்னுடைய மிகப்பெரிய நலம் விரும்பியான என்னுடைய சகோதரியை நான் மிஸ் செய்கிறேன். ஒரு நாளைக்கூட சுலபமாகவோ அல்லது உன்னைப் பற்றி நினைக்காமலோ கடக்க முடியவில்லை. காலத்தில் பின்னோக்கிச் சென்று அனைத்தையும் மாற்ற விரும்புகிறேன். நீ என்னை விட்டுச் செல்லும் முன் எனக்கு நீ கொடுத்த அனைத்து நினைவுகளுக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

நீ இப்போது ஒரு தேவதையாக மேலிருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ ஒரு ரத்தினம், உன்னை நான் உடைத்துவிட்டேன். நீ இனி இங்கு இல்லை என்பதை இதயம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நீ ஒரு சிறந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். விரைவில் நானும் உன்னைப் பார்க்க வருவேன்''.

இவ்வாறு யாஷிகா பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE