சூர்யாவுக்கு ஜோதிகா கொடுத்த திருமண நாள் பரிசு

By செய்திப்பிரிவு

தங்களது 15-வது திருமண நாளை முன்னிட்டு தான் வரைந்த ஓவியத்தை சூர்யாவுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் ஜோதிகா.

தமிழ்த் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள் சூர்யா - ஜோதிகா. இந்த ஜோடி திரையிலும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருவருமே காதலித்து 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். சூர்யா - ஜோதிகாவுக்குத் திருமணமாகி கடந்த செப்.11ஆம் தேதியுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டுப் பலரும் சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் இணைந்த ஜோதிகா தொடர்ந்து புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தங்களது 15-வது திருமண நாளை முன்னிட்டு சூர்யாவின் ஓவியம் ஒன்றை வரைந்து அதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் ஜோதிகா.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''சரியான நபரைச் சந்திப்பது விதி. அவரது மனைவியாக மாறுவது நம்முடைய தேர்வு. ஆனால், அந்த நபருடன் தினம் தினம் அதிகம் அதிகமாகக் காதலில் விழுவது நம்முடைய கையில் இல்லை. காரணம் அவர் ஒரு உண்மையான மனிதர் என்பதால் மட்டுமே. என் குழந்தைகளின் தந்தையும், என் கணவரும், என் சக நடிகரும், என் இன்னொரு தாயும், மிக முக்கியமாக என் மிகச்சிறந்த நண்பனுக்கு. இந்த விசேஷ நாளில் என்னுடைய சிங்கத்துக்கு நான் கொடுக்கும் ஒரு சிறிய அன்பளிப்பு''.

இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE