'ஆர்.ஆர்.ஆர்' வெளியீடு எப்போது? - படக்குழுவினர் விளக்கம்

By செய்திப்பிரிவு

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெளியீடு எப்போது என்பதற்குப் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் அந்தத் தேதியில் வெளியாகாது என்று தகவல் பரவினாலும், அதிகாரபூர்வமாக படக்குழுவினர் எதுவுமே தெரிவிக்காமல் இருந்தனர்.

தற்போது முதன்முறையாக 'ஆர்.ஆர்.ஆர்' வெளியீடு குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளது படக்குழு. அந்தப் படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. அக்டோபரில் ரிலீஸ் செய்ய ஏதுவாக பணிகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறது.

திரையரங்குகள் தொடர்ந்து மூடியிருப்பதால் எங்களால் புதிய தேதியை இப்போது சொல்ல முடியாது. உலக சினிமா சந்தை மீண்டும் களைக்கட்டத் தொடங்கும்போது நாங்கள் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவிப்போம்"

இவ்வாறு ஆர்.ஆர்.ஆர் படக்குழு தெரிவித்துள்ளது.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் வெளியாகவுள்ளது . இதனால் அதற்கு ஏற்ப வெளியீட்டுத் தேதியைத் தேர்வு செய்யும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE