'டாக்டர்' வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்தப் படத்தினை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு, 'பீஸ்ட்' படத்தினை இயக்கி வருகிறார் நெல்சன்.
கரோனா அச்சுறுத்தல் நேரத்தில் 'டாக்டர்' படம் ஓடிடியில் தான் வெளியாகும் எனத் தகவல் வெளியானது. ஆனால், தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் 'டாக்டர்' வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'டாக்டர்' திரையரங்குகளில் வெளியாகவுள்ளது தொடர்பாக, கே.ஜே.ஸ்டுடியோஸ் ராஜேஷ் கூறியிருப்பதாவது:
» ரஜினியிடம் ஆசி பெற்ற ஷங்கரின் மகள்
» கலைஞர் திரையரங்கம்: முதல்வருக்கு ஆர்.வி.உதயகுமார் கோரிக்கை
"'டாக்டர்' படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்த படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழில் புதுமையான, இது போன்ற ஒரு ப்ளாக் காமெடி படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைத் தரும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக கோவிட் 19 எங்கள் வெளியீட்டு திட்டமிடல்களை மாற்றியது. 'டாக்டர்' படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்ததால், அந்த காலகட்டத்தில் பல்வேறு ஓடிடி தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. அப்போதும் 'டாக்டர்' படத்தை பெரிய திரைக்குக் கொண்டு வருவதே எனது முதல் தேர்வாக இருந்தது.
எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் வெளியீட்டுக்காகக் காத்திருப்பது கடினமான முடிவாக இருந்தது. இப்போது மீண்டும் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் உங்கள் ஆவலை நிறைவேற்றும் வகையில் 'டாக்டர்' படத்தைத் திரையரங்குகளில் கொண்டு வருகிறோம். இத்திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து முக்கிய பங்குதாரர்களும் தங்கள் வியாபாரத்தைப் புதுப்பித்து, மறுமலர்ச்சி தரவும் ’டாக்டர்’ படம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்"
இவ்வாறு கே.ஜே.ஆர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.