டிக்கெட் புக்கிங்: தமிழக அரசுக்கு விஷால் வேண்டுகோள்

ஆந்திர அரசு போன்றே தமிழக அரசும் டிக்கெட் புக்கிங் இணையதளத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை எல்லாம் கணினிமயமாக்க வேண்டும் என்று நீண்டகாலமாகப் பேசி வருகிறார்கள். ஆனால், இன்னும் கணினிமயமாகவில்லை. சில தினங்களுக்கு முன்பு ஆந்திர அரசே அங்குள்ள திரையரங்குகளை எல்லாம் ஒன்றிணைத்து டிக்கெட் புக்கிங்கிற்காக தனியாக இணையதளம் ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தது.

இதேபோன்று தமிழக அரசும் தொடங்க வேண்டும் என்று விஷால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக விஷால் விடுத்துள்ள அறிக்கை:

"ஆந்திரத் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதியை ஏற்படுத்திய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்குத் தலைவணங்குகிறேன். இது தமிழகத் திரையரங்குகளிலும் நடைமுறைக்கு வரவேண்டும் என்பது நீண்டகால விருப்பம். இதை ஒட்டுமொத்தத் திரையுலகமே வரவேற்கும். காரணம், ஆன்லைன் டிகெட் முறை மூலம் 100 சதவீதம் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படுகிறது.

ஆகையால், ஆந்திராவைப் போலத் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினும் இதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம், திரையரங்குகள் வசூலில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து திரைத்துறைக்கும் அரசுக்கும் ஒரு வரப் பிரசாதத்தைத் தரவேண்டும்"

இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE