சமரசம் செய்து கொள்ளாத திராவிட சிந்தனையாளர்: புலமைப்பித்தன் மறைவுக்கு சிவக்குமார் இரங்கல்

சமரசம் செய்து கொள்ளாத திராவிட சிந்தனையாளர் என்று புலமைப்பித்தன் மறைவுக்கு வெளியிட்ட இரங்கல் குறிப்பில் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர் புலவர் புலமைப்பித்தன். சமீபத்தில் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த புலமைப்பித்தன், சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி நேற்று (செப். 08) காலை உயிரிழந்தார்.

அவருடைய மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிவக்குமார் இன்று (செப். 09) வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

"புலவர் புலமைபித்தன் கோவை மாவட்டம் சூலூரில், எனக்கு 5 ஆண்டு முன்பு பள்ளி இறுதி படிப்பை முடித்தவர். முறையாக தமிழ் படித்து புலவரானவர். மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கியவர். ஆசிரியர் பணியினைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்களின் “குடியிருந்த கோயில்” படத்திற்கு, ‘நான் யார் நான் யார் நீ யார்.. ‘ பாடல் எழுதி அதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இலக்கியத் தரமுள்ள பாடல்கள் எழுதுவதில் தனித்துவமாக விளங்கினார்.

என் படங்கள் பல அவர் பாடல்களால் பெருமை பெற்றன.

‘ஆகாயம் பூமி என்றும் ஒன்றா?

நீ அந்த வானம் நான் இந்த பூமி

ஒன்றென்று யார் சொல்லுவார்..” என்று ‘சாமந்திப்பூ’ படத்திற்குப் பாடல் எழுதிக் கொடுத்தார். நாயகி சோபாவை நினைத்து படத்தில் நான் பாடிய பாடல்.

எனது 100-வது படத்தின் உயிராக மக்கள் கொண்டாடிய பாடல் ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி, பச்சமல பக்கத்திலே மேயுதின்னு சொன்னாங்க..’ 1979-ம் ஆண்டின் மிகச்சிறந்த பாடலாக தமிழக அரசு விருது பெற்றது. இளையராஜாவும், எஸ்.பி.பி யும் அவர் வரிகளுக்கு உயிர் கொடுத்தனர்.

எம்.ஜி.ஆர் அரசில் அரசவைக் கவிஞராகவும், மேல்சபைத் துணைத் தலைவராகவும் நியமிக்கப் பட்டார். தமிழீழப் போராளி பிரபாகரனுக்கு துவக்கக் காலத்தில் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர்.

திருமணத்திற்கு முன்னரே தன் புதல்வி தீ விபத்தில் அகால மரணமடைந்த போதும், தன் மகன் மோட்டார் விபத்தில் அகப்பட்டு ‘கோமா’ நிலையில் 11 மாதங்கள் இருந்து இறந்த போதும் கலங்காத நெஞ்சுரம் மிக்கவர்.

சமரசம் செய்து கொள்ளாத திராவிட சிந்தனையாளர், பெரியாரின் முதல் வரிசை சீடர். அவரது இழப்பு கலை இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரை தன்னுடைய 75-வது வயதில் இழந்திருக்கும் அவரது துணைவியாருக்கும், மருமகளுக்கும், பேரன் திலீபனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். "

இவ்வாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE