மீண்டும் தொடங்கப்படும் 'சந்தனத்தேவன்'?

அமீர் இயக்கத்தில் ஆர்யா, சத்யா நடித்துள்ள 'சந்தனத்தேவன்' படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அமீர். இவருடைய இயக்கத்தில் கடைசியாக 2013-ம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த 'ஆதி பகவன்' படம் வெளியானது. அதற்குப் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து ஆர்யா, சத்யா இருவரும் நடிக்க 'சந்தனத்தேவன்' என்னும் படத்தினைத் தொடங்கினார் அமீர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே பைனான்ஸ் பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு எந்தவொரு படத்தையும் அமீர் இயக்கவே இல்லை. இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசும் போது, "மத்திய, மாநில அரசு இரண்டையும் கடுமையாக எதிர்த்துப் பேசுவதால் பைனான்சியர்கள் எனக்கு பைனான்ஸ் பண்ணுவதில்லை" என்று குற்றம்சாட்டினார் அமீர்.

இதனால் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார் அமீர். தற்போது மீண்டும் 'சந்தனத்தேவன்' படத்தைக் கையில் எடுத்துள்ளார். மீண்டும் அந்தப் படத்தின் பணிகளைத் தொடங்குவதற்கானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 35 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளார் அமீர். விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE