'பாட்டு' ஒத்திவைப்பு: புதிய படத்தைத் தொடங்கினார் அல்போன்ஸ் புத்திரன்

By செய்திப்பிரிவு

'பாட்டு' படத்தை ஒத்திவைத்துவிட்டு, பிரித்விராஜ் நடிக்கும் புதிய படத்தைத் தொடங்கியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. அந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமலேயே இருந்தார்.

பல்வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும், எதுவுமே அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருந்தது. இறுதியாக ஃபகத் பாசில், நயன்தாரா நடிக்கும் 'பாட்டு' படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார் அல்போன்ஸ் புத்திரன். அதனை இயக்குவது மட்டுமன்றி எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் ஏற்றார்.

2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தப் படம் தொடங்கப்படாமலேயே இருந்தது. தற்போது 'பாட்டு' படத்தை ஒத்திவைத்துவிட்டு, புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன். இதில் பிரித்விராஜ், நயன்தாரா இருவரும் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

'கோல்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரித்விராஜ் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE