சினிமா வாய்ப்புக்காக பப்ளிசிட்டி தேடுகிறேனா? - நடிகை கனகா விளக்கம்

By செய்திப்பிரிவு

சினிமா வாய்ப்புக்காக பப்ளிசிட்டி தேடுவதாக நெட்டிசன்கள் செய்த விமர்சனத்துக்கு நடிகை கனகா விளக்கம் அளித்துள்ளார்.

1989ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா, தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பலவேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நீண்ட வருடங்களாக சினிமாவிலிருந்து விலகியிருந்த கனகா சமீபத்தில் தான் வெளியிட்ட ஒரு வீடியோவில் தனக்கு சினிமாவில் மீண்டும் நடிக்க ஆசை வந்துள்ளது என்றும், தற்போது தனக்கு 50 வயது ஆகிவிட்டதால் சினிமாவைப் பற்றிய நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அந்த வீடியோவைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் சினிமா வாய்ப்புக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் கனகா இவ்வாறு பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் என்று விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய வீடியோவை ஒன்றை கனகா வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

''நான் சினிமாவில் நடிப்பதற்காக பப்ளிசிட்டி வேண்டி அந்த வீடியோவை வெளியிடவில்லை. நான் சினிமா பற்றி இதுவரை எதுவும் கற்கவில்லை. இப்போது அவற்றைப் புதிதாகக் கற்க வேண்டுமா? என்று மீண்டும் யோசிக்கிறேன். பலரும் நான் பப்ளிசிட்டிக்காகவும், சினிமா வாய்ப்புக்காகவும் இப்படி வீடியோ பதிவிடுவதாக விமர்சிக்கின்றனர். உண்மையில் நான் உங்களுடன் மீண்டும் பேசுவதற்காகவே இந்தத் தளத்துக்கு வந்தேன்''.

இவ்வாறு கனகா பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE