மகன் மூலம் நிறைவேறிய ஆசை: சிரஞ்சீவி பகிர்வு

By செய்திப்பிரிவு

ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டது, மகன் மூலம் நிறைவேறியிருப்பதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் 50-வது படம் இதுவாகும். அரசியல் கலந்த த்ரில்லராக உருவாகும் இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளது.

இந்தப் படத்தின் பூஜையில் சிரஞ்சீவி, ராஜமெளலி, ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பை சிரஞ்சீவி க்ளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்.

ஷங்கர் இயக்கத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டதாகவும், அது தன் மகன் மூலம் நிறைவேறி இருப்பதாகவும் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பதிவில் சிரஞ்சீவி கூறியிருப்பதாவது:

"சில படங்கள் தொடக்கத்திலிருந்தே விசேஷமானவையாக அமையும். இதுவும் அப்படியான ஒன்று. ஷங்கர் உடன் பணிபுரிவது ஒரு கனவாக இருந்து வந்தது. ராம் சரண் மூலம் அக்கனவு நனவாகி இருக்கிறது. அவர்கள் படம் இன்று தொடங்கியுள்ளது. கியாரா அத்வானி, தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்"

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

இதுவரை ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்ததில்லை. ஆனால், ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஜென்டில்மேன்' படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகனாக நடித்தவர் சிரஞ்சீவி. அந்தப் படம் இந்தியில் தோல்வியைத் தழுவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE