மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி தனது பிறந்தநாளை நேற்று (செப்.07) கொண்டாடினார். நடிகர்கள் அமிதாப் பச்சன், மோகன்லால், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் மம்முட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மம்முட்டி தொடர்பான ஹாஷ்டேகுகளை டிரெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் மம்முட்டி தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனது பிறந்தநாளில் அனைவரும் காட்டிய அன்பால் நான் நெகிழ்ந்து போனேன். எனக்கு நன்கு பரிச்சியமானவர்கள் தொடங்கி என்னைத் தெரியாதவர்கள் அனைவரும் சம அளவில் அன்பைப் பொழிந்தனர். முதல்வர் தொடங்கி எண்ணற்ற தலைவர்கள் வாழ்த்தினார்கள். அமிதாப் பச்சன், மோகன்லால், கமல்ஹாசன் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஊடக நண்பர்கள், வெளியீட்டாளர்கள், செய்தி சேனல்கள் என நாடு முழுவதுமிருந்தும் வாழ்த்துகள் வந்துள்ளன.
சினிமா ரசிகர்கள் தங்கள் அன்பை பல வகையில் வெளிப்படுத்தி என் நெஞ்சைத் தொட்டுவிட்டனர்.
பொதுவாகவே நான் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் தயக்கம் காட்டுவேன். ஆனால், இன்று என்னைத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எனப் பலரும் காட்டியுள்ள அன்பு இந்த நாளை மிகவும் சிறப்பான நாளாக மாற்றியுள்ளது. இப்படியான தருணத்தில் நான் முழுமையாக ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். நீங்கள் காட்டிய அன்பை பன்மடங்கு திருப்பிச் செலுத்துகிறேன். உங்கள் அனைவரையும் என்னால் முடிந்த வரையிலும் மகிழ்விப்பேன்.
இவ்வாறு மம்முட்டி கூறியுள்ளார்.