பண மோசடி வழக்கில் ‘பிரியாணி’ பட நடிகையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர். அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, நாசர் நடித்த படம் ‘பிரியாணி’. இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்தவர் லீனா மரியா பால். இது தவிர ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் ஜான் ஆபிரகாம் நடித்த ‘மெட்ராஸ் கஃபே’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் மேற்குறிப்பிட்ட சுகேஷ் சந்திரசேகரின் காதலி ஆவார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவியான அதிதி சிங் அளித்த புகாரின் பேரில் பேரில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லீனா மரியா பாலை கைது செய்துள்ளனர்.
» ஏழை நாட்டில் நடிகர்கள் ரூ.100 கோடி சம்பளம் வாங்குவது அயோக்கியத்தனம்: வேலு பிரபாகரன் ஆவேசம்
» எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்: மீடியாவை கடுமையாகச் சாடியுள்ள கீர்த்தி சனோன்
தனது கணவரான ஷிவிந்தர் மோகன் சிங்கை சிறையிலிருந்து ஜாமீனில் எடுக்க உதவுவதாகவும், அதற்காக ரூ. 200 கோடி தன்னிடம் பெற்றதாகவும் சுகேஷ் சந்திரசேகர் மீது அதிதி சிங் போலீஸில் புகாரளித்திருந்தார். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கொண்டே தனது காதலியான லீனா மரியா பால் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் லீனா மரியா பால் மற்றும் சுகேஷின் உதவியாளர்களான கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.