பாடல் காட்சிகள் லீக்: 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

பாடல் காட்சிகள் இணையத்தில் லீக்கானது தொடர்பாக அதிர்ச்சியில் இருக்கிறது 'பொன்னியின் செல்வன்' படக்குழு.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவடைய உள்ளது. தற்போது விக்ரம், ஜெயம் ரவி, ரஹ்மான் உள்ளிட்டோரின் காட்சிகள் முடிக்கப்பட்டுவிட்டன.

தற்போது டாட்டியா மாவட்டத்தின் ஓர்ச்சா, குவாலியர் கோட்டைகளை அடுத்து இந்தோர் மாவட்டத்தின் ஹரிகேஷ்வரிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கார்த்தி, த்ரிஷா இருவரும் பங்கேற்ற பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு.

இந்தப் படப்பிடிப்பின் வீடியோ காட்சிகள் இணையத்தில் லீக்காகிவிட்டன. இதில் கார்த்தி, த்ரிஷா இருவரும் நடனமாடுவது போன்று அமைந்துள்ளது. இந்தக் காட்சிகள் லீக்கானதால் படக்குழு பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.

ஏனென்றால், 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தொடங்கப்பட்டதிலிருந்து யாருடைய புகைப்படமோ, வீடியோ காட்சிகளோ வெளியானதில்லை. சமீபமாகத்தான் படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி, த்ரிஷா இருவரும் நடனமாடும் காட்சிகளைப் பகிர்ந்த சமூக வலைதளப் பக்கங்களின் மீது நடவடிக்கை எடுக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE