இயக்குநர் புகார்: தணிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள்

By செய்திப்பிரிவு

இயக்குநர் விஜய் ஸ்ரீ புகாரால், தெலுங்குப் படத்தின் தணிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு சாருஹாசன், ஜனகராஜ், பாலா சிங், மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'தாதா 87'. இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ தயாரித்து இயக்கியிருந்தார். இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ உடன் இணைந்து கலை சினிமாஸ் நிறுவனமும் தயாரித்திருந்தது.

கலை சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து தெலுங்கு உரிமையை வாங்கி 'ஒன் பை டூ' படத்தை உருவாக்கியுள்ளார்கள். இதில் சாருஹாசன் கதாபாத்திரத்தில் சாய்குமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியானபோது, அதைப் பார்த்துக் கடும் அதிர்ச்சியடைந்தார் விஜய் ஸ்ரீ. உடனடியாக இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இது தொடர்பாக என்ன நடந்தது என்பதை விளக்கி, தணிக்கை அதிகாரிகளுக்குக் கடிதமொன்றை எழுதினார் விஜய் ஸ்ரீ. அதில் 'ஒன் பை டூ' படத்தைத் தன்னிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் வாங்கும் வரை தணிக்கை செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

சமீபத்தில் 'ஒன் பை டூ' படத்தைத் தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு. விஜய் ஸ்ரீ எழுதியுள்ள கடிதத்தை முன்வைத்து, படத்தின் தணிக்கைக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீயிடம் 'ஒன் பை டூ' படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

'ஒன் பை டூ' படத்துக்குத் தணிக்கை மறுக்கப்பட்டதற்குத் தணிக்கை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய் ஸ்ரீ. இது தொடர்பாகத் தணிக்கை அதிகாரிகளுக்கு நன்றிக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

'தாதா 87' படத்தைத் தொடர்ந்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் 'பப்ஜி' மற்றும் 'பவுடர்' ஆகிய படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE