விவேக், மறைவுக்கு முன்பு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
மறைந்த நடிகர் விவேக், மிர்ச்சி சிவாவுடன் பங்கெடுத்துக் கொண்ட ஓடிடி நிகழ்ச்சி அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியானது. ’லொல், எங்க சிரி பார்ப்போம்’ என்ற பெயரில் வெளியான நிகழ்ச்சியின் நடுவராகப் பணிபுரிந்திருந்தார் விவேக்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுப் பலரும் விவேக்குடனான தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இயக்குநர் கெளதம் மேனன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
”டிஜிட்டல் வெளியீடாக விவேக்குடன் ஒரு படம் திட்டமிட்டிருந்தேன். அவரது முதல் ஓடிடி நிகழ்ச்சியான 'எங்க சிரி பார்ப்போம்' நிகழ்ச்சி வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்றார். அதுதான் எங்கள் கடைசி உரையாடல்.
அவரது முதல் ஓடிடி நிகழ்ச்சியைப் பார்க்கும்போது அதை நினைத்துப் பார்க்கிறேன். என்ன ஒரு உற்சாகமான நிகழ்ச்சி. சொக்கு, ரிவால்வர் ரிச்சர்ட் இரண்டு கதாபாத்திரங்களின் நினைவுகளுடன்".
இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
தற்போது சிலம்பரசன் நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.