அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ப்ரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதன் படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் ஷாரூக்கான், நயன்தாரா, ப்ரியாமணி ஆகியோர் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் கதைப்படி மிக முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஷாரூக்கான் நடிப்பில் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் ப்ரியாமணி. தற்போது அவருடனேயே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனைத் தயாரித்து வருகிறது. இதில் ஷாரூக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். ஒரு கதாபாத்திரத்துடன் படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.