மீண்டும் ஷாரூக்கான் படத்தில் யோகி பாபு?

By செய்திப்பிரிவு

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள புதிய படத்தில் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னும் படம் தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. இன்னும் சில நாட்களில் புனேவில் முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். அவர் இந்தியில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது. மேலும், ஷாரூக்கான் படத்தில் பல்வேறு தென்னிந்திய நடிகர்களையும் நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார் அட்லி.

அதில் முதலாவதாக ஷாரூக்கானுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபுவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எப்போது படப்பிடிப்பு என்பதற்கான தேதிகள் முடிவானவுடன், ஒப்பந்தத்தில் யோகி பாபு கையெழுத்திடவுள்ளார்.

ஷாரூக்கான் நடிப்பில் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. ஆனால், அட்லி படத்தில் ஷாரூக்கானுடனே பயணிக்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE