'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் குதிரை பலி: மணிரத்னம் மீது வழக்குப் பதிவு

'பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டு வந்த குதிரை ஒன்று சண்டைக் காட்சியின்போது உயிரிழந்ததைத் தொடர்ந்து மணிரத்னம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் ஒவ்வொரு முன்னணி நடிகரின் காட்சிகளாக முடிக்கப்பட்டு வருகின்றன. சண்டைக் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் பல குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு குதிரை சண்டைக் காட்சியின்போது காயமடைந்து உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து பீட்டா அமைப்பு, மணிரத்னம் மீதும், தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மீதும் புகார் அளித்தது. இதனால் மணிரத்னம் மீதும், அந்நிறுவனம் மீதும், அந்தக் குதிரையின் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விலங்குகள் நல வாரியம் மணிரத்னத்தை விசாரணைக்கு அழைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE