'தலைவி' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால், படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளியான 2 வாரத்தில் ஓடிடியில் வெளியிட 'தலைவி' படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியான 4 மாதங்களுக்குப் பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால், இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பிரச்சினைத் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் விசாரித்த போது, இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். விரைவில் கங்கணா ரணாவத், அரவிந்த்சாமி உள்ளிட்ட படக்குழுவினருடன் விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கவுள்ளது படக்குழு.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'தலைவி' வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.