பிக் பாஸ் வெற்றியாளர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல நடிகரும், இந்தி 'பிக் பாஸ்' சீசன் 13 வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 40.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் சுக்லா ‘பலிகா வாது’, ‘தில் சே தில் தக்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதில் ‘பலிகா வாது’ என்ற சீரியல் தமிழில் ‘மண்வாசனை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து ‘ஜலக் திக் லாஜா 6’ உள்ளிட்ட சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

2005ஆம் ஆண்டு உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தையும் சித்தார்த் சுக்லா வென்றுள்ளார். அதன் பிறகு இந்தி 'பிக் பாஸ்' 13-வது சீசனில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். அவருக்கென்று சமூக வலைதளங்களில் தனிப்பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. அந்நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் சித்தார்த் சுக்லா அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (செப் 02) காலை திடீரென சித்தார்த் சுக்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சித்தார்த் சுக்லாவின் தீடீர் மரணம் இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE