தமிழகத்தில் 50 சதவீதப் பார்வையாளர்ளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆர் நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமான 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் மீண்டும் டிஜிட்டலில் நாளை சென்னையில் வெளியாகிறது.
தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை குறைந்துவரும் நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் திரையரங்குகளுக்கு மக்கள் வருகை என்பது கேள்விக்குறி என்ற நிலைதான் தொடர்ந்து நிலவி வருகிறது.
கரோனா காலங்களில் தயாரிக்கப்பட்ட புதிய படங்கள் பலவும் ஓடிடி தளங்களில் வெளியாகி வரும் நிலையில், திரையரங்குகளில் படங்கள் வெளியாவது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.
பழைய படங்கள் என்றால் அதிலும் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் என்றால் இதற்கென்று தியேட்டர்களுக்கு வந்து பார்க்கும் ரசிகர் கூட்டம் என்றே சென்னையில் எப்போதும் உண்டு. அவ்வகையில் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் மீண்டும் வெளியான 'வசந்த
மாளிகை' 50 நாட்களைக் கடந்து ஓடியது.
இதனை நன்கு புரிந்துகொண்ட திரையரங்க உரிமையாளர்கள் கரோனா காலத்தில் ஒருவித சஞ்சலத்திலும் வெறுமையிலும் இருக்கும் ரசிர்களை ஈர்க்கும்வகையில் புதிய உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். காலியாக உள்ள தியேட்டர்களின் இருக்கைகளை நிரப்பவும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக மாற்றுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. எக்காலத்திலும் மாற்றமுடியாத எம்ஜிஆர் ரசிகர்கள்தான் அதற்குப் பொருத்தமானவர்கள் என்பதை தமிழக அரசியல், சினிமா அனுபவம் மிக்கவர்கள் அறிவார்கள்.
அதுமட்டுமின்றி இன்றைக்கும் இளம் தலைமுறை ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ள மிகச்சிறந்த பொழுதுபோக்குப் படமாக அமைந்துள்ளது 'உலகம் சுற்றும் வாலிபன்'. சென்னையில் 'உலகம் சுற்றும் வாலிபன்' நாளை வெளியாகிறது.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு அக்காலத்தில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியான இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் தோன்றுவார். இப்படத்தில் மஞ்சுளா, லதா, சந்திரலேகா, மெட்டா ரூன்கிரேட் (தாய்லாந்து நடிகை), எம்.என்.நம்பியார், மனோகர், அசோகன், நாகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் காலங்களைக் கடந்தும் ஒலித்துக் கொண்டிருக்கும் பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, தங்கத் தோணியிலே, லில்லி மலருக்குக் கொண்டாட்டம் போன்ற தேனினும் இனிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. எம்ஜிஆர் இயக்கி நடித்த வெகுசில படங்களில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது 'உலகம் சுற்றும் வாலிபன்'.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலாக முழுக்க முழுக்க ஜப்பான், பாங்காக் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் உருவாக்கப்பட்ட சிறப்புமிக்க இத்திரைப்படம் தமிழகத்தில் வெளியாக பல்வேறு தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தடைகளை உடைத்த பிறகு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது தமிழ் சினிமா வரலாறு.
இன்று சென்னை நகரச் சாலைகளில் வேகவேகமாகச் சென்று கொண்டிருந்தவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது 'உலகம் சுற்றும் வாலிபன்' சுவரொட்டிகள்.
சுவரொட்டிகளை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''எம்ஜிஆர் படம்னாலே தனி மகிழ்ச்சிதான். கண்டிப்பா நாங்க போய் வாத்தியாரு படத்தைப் பார்ப்போம். நீங்க வேண்ணா பாருங்க நாளைக்கு எம்ஜிஆர் படம் ஓடற எல்லாம் தியேட்டரும் கூட்டம் நிரம்பி வழியும்'' என்று உற்சாகமாகப் பேசினர்.