தமிழக முதல்வருக்கு சிரஞ்சீவி புகழாரம்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குத் தனது ட்விட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார் சிரஞ்சீவி.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. திரையுலகினராலும், ரசிகர்களாலும் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். திரையுலகின் பல்வேறு பிரச்சினைகளுக்கு இவருடைய முன்னெடுப்பின் மூலமே தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.

இன்று (செப்டம்பர் 1) சென்னை வந்திருந்த சிரஞ்சீவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் சிரஞ்சீவி கூறியிருப்பதாவது:

"தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. கட்சிகள் தாண்டி அவர் எடுத்திருக்கும் சில பயனுள்ள முயற்சிகள் மூலம் சிறந்த அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருப்பதற்கும், மக்களின் தலைவராக, தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்புடன், கரோனா காலகட்டத்தில் சிறப்பான ஆட்சி தந்து வருவதற்காகவும் வாழ்த்துகள் கூறினேன்".

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

தற்போது மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கான 'காட்பாதர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிரஞ்சீவி. அதனைத் தொடர்ந்து அஜித் நடித்த 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE