'எதற்கும் துணிந்தவன்' அப்டேட்: 51 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

காரைக்குடியில் நடைபெற்று வந்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் காரைக்குடியில் முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனை 51 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தி முடித்துள்ளது படக்குழு.

இது தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பதிவில், "51 நாட்கள் நடந்த நீண்ட 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பை இன்று முடித்தேன். சூரியனாலும் மழையாலும் எங்கள் வேகத்தை நிறுத்த முடியவில்லை. என்னே ஒரு கடின உழைப்பைத் தரும் அணி! நம்பமுடியாத உழைப்பு. சூர்யா சார், ரத்னவேலு சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

காரைக்குடி படப்பிடிப்பு முடிவடைந்ததன் மூலம், 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன. 5 நாட்கள் மட்டும் இடைவெளிவிட்டு, அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE