‘ஆட்டோகிராஃப்’ பார்த்துவிட்டு குரல் தழுதழுத்த பாரதிராஜா: சேரன் நெகிழ்ச்சிப் பதிவு

By செய்திப்பிரிவு

‘ஆட்டோகிராஃப்’ படம் பார்த்துவிட்டு பாரதிராஜா குரல் தழுதழுக்கப் பேசியதாக இயக்குநர் சேரன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

2004-ம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த படம் 'ஆட்டோகிராஃப்'. இப்படத்தில் கோபிகா, சினேகா, மல்லிகா, ராஜேஷ், இளவரசு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக 'ஆட்டோகிராஃப்' இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்படம் நேற்று (ஆக. 31) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பலரும் அப்படம் குறித்த தங்களது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா 'ஆட்டோகிராஃப்' படத்தைப் பார்த்துவிட்டு தனக்கு போன் செய்ததாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு அது தொடர்பான புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தனது பதிவில் சேரன் கூறியிருப்பதாவது:

''காலை பாரதிராஜா அப்பாவிடமிருந்து அழைப்பு. எடுத்துப் பேசுகிறேன். அவர் குரல் தழுதழுக்கிறது. "என்னப்பா" என சற்று பதற்றம். 'ஆட்டோகிராஃப் படம் பார்க்கிறேன். எங்கடா அந்த சேரன். நீ திரும்ப வரணும்டா' என அக்கறையோடு சொல்கிறார். 'இதோ வந்துட்டேன்பா' என அவர் இல்லம் சென்றேன். ஆசீர்வதித்தார்''.

இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE