சக நடிகரை மணக்கும் சந்திரா லக்‌ஷ்மண்

By செய்திப்பிரிவு

திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகை சந்திரா லக்‌ஷ்மண் தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். அவருடன் இணைந்து நடித்துவரும் டோஷ் க்றிஸ்டி என்ற நடிகரை அவர் மணக்கிறார்.

தமிழில் 'மனசெல்லாம்', 'தில்லாலங்கடி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லக்‌ஷ்மண். 'காதலிக்க நேரமில்லை' சீரியல் மூலம் பிரபலமானவர். இது தவிர 'மகள், 'சொந்தபந்தம் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். 2015க்குப் பின் நடிப்புத் துறை பக்கம் வராத இவர் கடந்த ஆண்டு முதல் மீண்டும் சின்னதிரையில் தனது நடிப்பைத் தொடர்ந்தார்.

மலையாளத்தில் இவர் நாயகியாக நடிக்கும் 'ஸ்வந்தம் சுஜாதா' என்கிற தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இன்னும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடித்துவரும் சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை சந்திரா மணக்கிறார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் சந்திரா, "ஆம், இதைத்தான் இருவரும் சொன்னோம். எங்கள் குடும்பத்தினரின் சம்மதத்தோடும், ஆசியோடும் ஒரு புதிய பயணத்தை நாங்கள் தொடங்குகையில் உங்களையும், எங்கள் நலவிரும்பிகளையும் எங்கள் மகிழ்ச்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தோம்.

எனது திருமணம் பற்றிய முடிவில்லா அத்தனை கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். எங்களை ஆசீர்வதித்து உங்கள் பிரார்த்தனைகளில் எங்களை வைத்திருங்கள். தொடர்ந்து பகிர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் கைகள் கோத்திருக்கும் புகைப்படத்தை இதோடு பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE