'ஆர்.ஆர்.ஆர்' வெளியீட்டுத் தேதி குறித்து விநியோகஸ்தர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஒருசில சின்ன சின்ன ஷாட்களைத் தவிர படத்தை முடித்துவிட்டோம் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
கரோனா அச்சுறுத்தலால் பலமுறை இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது, இந்தப் படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்து விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், படக்குழுவினர் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
» ’புஷ்பா’ அப்டேட்: ஃபகத் பாசில் லுக் வெளியீடு
» விமானத்தில் என்னுடன் விரும்பி அமர்ந்த ரஜினிகாந்த்: சூரி நெகிழ்ச்சி
முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த அக்டோபர் 13-ம் தேதி வெளியீடு சாத்தியமில்லை என்பது முடிவாகிவிட்டது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு 'புஷ்பா', பொங்கல் விடுமுறைக்கு 'பீம்லா நாயக்', 'சர்காரு வாரி பாட்டா' உள்ளிட்ட படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளன. 2022-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு 'கே.ஜி.எஃப் 2' வெளியாகவுள்ளது.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் வெளியாகவுள்ளது . இதனால் அதற்கு ஏற்ப வெளியீட்டுத் தேதியைத் தேர்வு செய்யும் எனத் தெரிகிறது. பெரும் பொருட்செலவிலான படம் என்பதால் அனைத்து மொழி விநியோகஸ்தர்களிடம் பேசி முடிவு செய்வார்கள் எனத் தெரிகிறது.