சந்தீப் கிஷன் - விஜய் சேதுபதி படத் தலைப்பு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும், விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கும் படத்துக்கு 'மைக்கேல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் போஸ்டர் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிடப்பட்டது.

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தைத் தொடர்ந்து முழுக்கப் பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமொன்றை இயக்கினார் ரஞ்சித் ஜெயக்கொடி. ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பினார். பிந்து மாதவி, தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு 'யாருக்கும் அஞ்சேல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த வருடமே இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானாலும், கரோனா நெருக்கடியால் படத்தின் வெளியீடு குறித்து இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வந்தார். இதில் விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.

அதிக பொருட்செலவில், தேசிய அளவில் பல மொழிகளில் அனைத்துத் தரப்பினருக்குமான படமாக இது உருவாவதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் பெயர், முதல் போஸ்டரோடு வெளியாகியுள்ளது. 'மைக்கேல்' என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் 'விசேஷ ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரைப் பகிர்ந்த சந்தீப் கிஷன், ''உண்மையிலேயே மக்கள் செல்வனாக இருந்ததற்கு நன்றி விஜய் சேதுபதி அண்ணா'' என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரிப்பாக உருவாகும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE