அருண் விஜய் - ஹரி திரைப்படம்: பிரகாஷ்ராஜுக்கு பதிலாக சமுத்திரக்கனி 

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு பதிலாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார்.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாமல் உள்ள இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சக்திவேல், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், எடிட்டராக ஆண்டனி, கலை இயக்குநராக சக்தி வெங்கட் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இரவு பகலாக நடந்து வருகிறது. கடந்த வாரம் சண்டைக் காட்சியில் நடித்தபோது அருண் விஜய்க்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

அருண் விஜய் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருவதால் தன்னால் தொடர்ந்து நடிக்க முடியாது என்கிற நிலையை பிரகாஷ்ராஜ் எடுத்துக் கூறியுள்ளார். "எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆதலால், எனக்கு பதிலாக வேறு நடிகரைக் கொண்டு படப்பிடிப்பை நடத்துங்கள். நான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திரும்பத் தந்து விடுகிறேன். நாம் அடுத்த படத்தில் இணைவோம்" என்று பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அடுத்தடுத்து நடித்து வரும் சமுத்திரக்கனி கடந்த ஒரு வாரமாக ஹரியின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்த கட்டமாக ராமேஸ்வரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE