‘உன் மனசே மனசுதான் வாத்தியாரே’ - வைரலாகும் ஆர்யாவின் ட்விட்டர் பதிவு

நடிகர் பசுபதியை ‘சார்பட்டா பரம்பரை’ பாணியில் ட்விட்டரில் வரவேற்ற ஆர்யாவின் பதிவு வைரலாகி வருகிறது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியான இந்தப் படத்தை விமர்சகர்கள் பாராட்டினார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.

குறிப்பாக இப்படத்தில் ஆர்யாவும், பசுபதியும் சைக்கிளில் அமர்ந்து செல்லும் ஒரு காட்சி இணையத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல்வேறு வடிவங்களில் அக்காட்சியை நெட்டிசன்கள் மீம்களாக வெளியிட்டு வைரலாக்கினர். பலவேறு நிறுவனங்கள்கூட அதைத் தங்களது விளம்பரத்துக்குப் பயன்படுத்தி வந்தன.

இதுவரை நடிகர் பசுபதி ட்விட்டர் தளத்தில் இல்லாமல் இருந்தார். ஆனால், பசுபதி பெயரில் ஏராளமான போலி ஐடிக்கள் அவரது புகைப்படங்களைப் பயன்படுத்திப் பதிவிட்டு வந்தனர். எனவே, கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் கணக்கு ஒன்றை பசுபதி உருவாக்கியுள்ளார். அது பெருமளவில் யாருக்கும் தெரியாமல் இருந்துவந்தது.

நேற்று (ஆக 25) நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பசுபதியின் அதிகாரபூர்வ ஐடியை வரவேற்று ‘சார்பட்டா பரம்பரை’ பாணியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே. பாக்ஸிங்கை விட ரத்த பூமி. உன்னோட பேருல இங்க நெறைய பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ஒரிஜினல் நான்தான்டான்னு உள்ள வந்த பாத்தியா? உன் மனசே மனசுதான். வா வாத்தியாரே இந்த வேர்ல்டு உள்ள போலாம்''.

இவ்வாறு ஆர்யா கூறியுள்ளார்.

ஆர்யாவின் இந்தப் பதிவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE