சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கம்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நடிகர் சிம்புவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டைத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின்போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் பிரச்சினை உண்டானது. இதேபோல சிம்புவால் பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் சிம்புவுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்திருந்தது.

தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு பெப்சி ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை முன்வைத்து தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து சிம்பு விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையே பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இதில் தற்போது சுமுகமான முடிவு எட்டப்பட்டு சிம்புவுக்கு விதித்திருந்த ரெட் கார்டைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்புக்கு பெப்சி ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் ராயப்பன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து எந்த முடிவையும் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE