ஒன்றிணையும் இயக்குநர்கள்: தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சி

By செய்திப்பிரிவு

முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்றிணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் நட்பாகி வருகிறார்கள். அடிக்கடி நேரில் சந்தித்து உரையாடுவது, வாட்ஸ் அப் குரூப் உரையாடல்கள் என்று இருந்த நட்பு, தற்போது அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்றிணைந்து 'ரெயின் ஆன் பிலிம்ஸ்' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

'மாநகரம்' பாணியில் சின்ன பட்ஜெட்டில் படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். 'விக்ரம்' படத்தை முடித்துவிட்டு இதன் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். 'ரெயின் ஆன் பிலிம்ஸ்' நிறுவனம், படங்கள் மட்டுமன்றி வெப் சீரிஸ், குறும்படங்கள் உள்ளிட்ட பல விஷயங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

'ரெயின் ஆன் பிலிம்ஸ்' நிறுவனத்தில் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன், மிஷ்கின், சசி, லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் இணைந்து பணிபுரியவிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE