ரூ.70 லட்சம் மோசடி வழக்கு: உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்த போலீஸாருக்கு நன்றி - ஆர்யா பகிர்வு 

By செய்திப்பிரிவு

மோசடி வழக்கு உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறைக்கு நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்

நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் விட்ஜா சென்னை காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, நடிகர் ஆர்யாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, விட்ஜா சார்பில் ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், உரிய விசாரணை நடத்தி, பதில் அளிக்குமாறு சைபர் பிரிவுக்கு உத்தரவிட்டது.

இதனடிப்படையில், ஆர்யாவிடம் நேரடியாகவும், புகார் அளித்த பெண்ணிடமும் விடியோகால் மூலமாகவும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சென்னை புளியந்தோப்பு முகமது அர்மான் என்பவர் ஆர்யாவைப் போல நடித்து அப்பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதும், அவரது உறவினர் முகமது ஹூசைனி பையாக் உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கத்தில் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறைக்கு நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ள ஆர்யா கூறியிருப்பதாவது:

உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்த சென்னை காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மற்றும் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது நான் வெளிப்படுத்தாத ஒரு மன உளைச்சலாக இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு ஆர்யா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE