'சலார்' அப்டேட்: வில்லனாக ஜெகபதி பாபு ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'சலார்' படத்தின் வில்லனாக ஜெகபதி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'கே.ஜி.எஃப்' படங்களைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'சலார்'. 'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. பிரபாஸ் நாயகனாக நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும், வில்லன் யார் என்பதைப் படக்குழு அறிவிக்காமலேயே இருந்தது.

'சலார்' படத்தின் ராஜமன்னார் கதாபாத்திரம் இன்று (ஆகஸ்ட் 23) அறிமுகம் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்தது. அதன்படி, பிரபாஸுக்கு வில்லனாக ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெகபதி பாபு. அவருடைய கதாபாத்திர வடிவமைப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, 2022-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி 'சலார்' வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது அதே தேதியில் 'கே.ஜி.எஃப் 2' வெளியாகவுள்ளதால், 'சலார்' படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE