அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள 'பெல் பாட்டம்' படத்துக்கு சவுதி, குவைத், கத்தார் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.
1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் 'பெல் பாட்டம்'. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரோனா முதல் அலையின்போது லண்டனில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியது படக்குழு.
இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி எனப் பலரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஆக.19 அன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் சவூதி, குவைத், கத்தார் உள்ளிட்ட சில நாடுகளில் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தின் உண்மைக்கு மாறான சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திரா காந்தி ஆட்சிக் காலமான 1980களில் நடந்த ஒரு விமானக் கடத்தல் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.