'கேஜிஎஃப் 2' தென்னிந்திய மொழிகளின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ

'கேஜிஎஃப் 2' படத்தின் கன்னட, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் பதிப்புகளின் சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

'கே.ஜி.எஃப்' படத்தைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் 'கே.ஜி.எஃப் 2' வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமத்தைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 'கேஜிஎஃப் 2' படத்துக்கான சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லையென்றாலும் மிகப்பெரிய விலைக்கு இந்த மொத்த உரிமையை ஜீ வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

''தொடர்ந்து தங்களது வீச்சை அதிகரித்து வரும் ஜீ தரப்பிடம் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமைகள் சென்றது மகிழ்ச்சி. இதன் மூலம் இன்னும் பெரிய அளவிலான ரசிகர்களுக்குப் படத்தைக் கொண்டுசேர்க்க முடியும்'' என்று படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE