கதை திருப்தியாக இல்லை - 'மாஸ்டர்' இந்தி ரீமேக்கிலிருந்து சல்மான்கான் விலகல்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து சல்மான்கான் விலகியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்தார். இதன் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றி லலித் குமார் வெளியிட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியான 'மாஸ்டர்' மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 'மாஸ்டர்' படத்தின் வசூல் நிலவரங்களைக் கணக்கில் கொண்டு இந்தி ரீமேக் முடிவானது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கச் சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியானது.

ஆனால், 'மாஸ்டர்' படத்தின் கதையினை இந்திக்கு ஏற்றவகையில் மாற்றினால் மட்டுமே நடிக்கச் சம்மதம் தெரிவித்திருந்தார் சல்மான்கான். அவருக்கு ஏற்றவகையில் கதையும் மாற்றியமைக்கப்பட்டது. அதனை படித்துவிட்டு, திருப்தியாக இல்லை என்று கூறிவிட்டாராம் சல்மான்கான்.

மேலும், தொடர்ச்சியாக 3 படங்களில் நடிக்கவுள்ளதால் 'மாஸ்டர்' படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்தும் விலகியுள்ளார். அவருடைய முடிவினால் 'மாஸ்டர்' இந்தி ரீமேக் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE