செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சாணிக் காயிதம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

'ராக்கி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இன்னும் வெளியாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடவுள்ளது.

இதற்கு முன்பாகவே ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 'சாணிக் காயிதம்' படத்தை இயக்க ஒப்பந்தமானார் இயக்குநர் அருண். கடந்த வருடம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானாலும் இந்த வருடம் பிப்ரவரி மாதம் தான் படப்பிடிப்பு தொடங்கியது.

கரோனா நெருக்கடியால் தடைபட்ட இந்தப் படப்பிடிப்பு அண்மையில் மீண்டும் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதல் இரண்டு படங்கள் வெளியாவதற்கு முன்பே அருண் மாதேஸ்வரனின் மூன்றாவது படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கலாம் என்று தமிழ்த் திரையுலகில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் இயக்குநர் செல்வராகவன், ’ஆயிரத்தில் ஒருவன் 2’, தனுஷ் நடிப்பில் ஒரு படம் ஆகியவற்றை இயக்குவதோடு விஜய் நடிப்பில் உருவாகும் ’பீஸ்ட்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE