இயக்குநர் பால்கி இயக்கத்தில் துல்கர் சல்மான், சன்னி டியோல் ஆகியோர் நடிக்கும் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவிருக்கிறார்.
இந்தித் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பால்கி. இவர் இயக்கத்தில் உருவான படங்கள் அனைத்துக்குமே ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் பி.சி.ஸ்ரீராம். அதேபோல் பால்கி இயக்கத்தில் வெளியான 'பேட் மேன்' படம் தவிர்த்து, மீதி அனைத்துப் படங்களுக்குமே இளையராஜாதான் இசை.
2018-ம் ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 'பேட் மேன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, கரோனா அச்சுறுத்தலால் பால்கி இயக்கத்தில் தொடங்கப்படவிருந்த படம் தள்ளிக்கொண்டே போனது. சில மாதங்களுக்கு முன்பு ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், தனது அடுத்த படம் பால்கி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் உளவியல் சார்ந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்று அறிவித்தார்.
தற்போது இந்தப் படம் குறித்து மேலும் சில தகவல்களை ஒரு பேட்டியில் இயக்குநர் பால்கி தெரிவித்துள்ளார். துல்கர் சல்மானுடன் சன்னி டியோலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை பூஜா பட்டும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரும் சன்னி டியோலும் ஜோடியாக நடிக்கிறார்களா என்பதற்கு பதில் சொல்லாத பால்கி, இருவருமே வேட்டையாடுபவர்கள் என்று மட்டும் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமிதாப் பச்சன் இந்தப் படத்தின் முக்கியக் கட்டத்தில் கதைக்குத் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக நடிக்கிறார் என்று பால்கி கூறியுள்ளார். “அவரை நடிக்க வைக்க வேண்டுமே என்கிற கட்டாயத்தில் என்றுமே நான் அவரை தேர்ந்தெடுத்ததில்லை” என்று பால்கி பேசியுள்ளார்.
பால்கியின் 'சீனி கம்' திரைப்படத்தில் ஆரம்பித்து அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களிலும் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். 'பேட்மேன்' படத்திலும் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார்.