சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்பதா? - கரீனா கபூரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

By செய்திப்பிரிவு

சீதையாக நடிக்க கரீனா கபூர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக சர்ச்சை உருவாகியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். 2000-ம் ஆண்டு வெளியான ‘ரெஃப்யூஜீ’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர் கடந்த 21 ஆண்டுகளில் ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சைஃப் அலி கானைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது பிரசவ கால அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார் கரீனா கபூர். இந்த புத்தகத்தில் தலைப்பு கிறிஸ்தவர்களின் மதநம்பிக்கையை அவமதிப்பது போல உள்ளதாக சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சை ஓய்வதற்கும் தற்போது மற்றொரு சர்ச்சையிலும் கரீனா கபூர் சிக்கியுள்ளார்.

ராமாயணத்தை தழுவி ஏற்கெனவே பல படங்கள், தொடர்கள் வெளியாகியுள்ளன. தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் ராமாயணம் திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் அதில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க கரீனா கபூர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் சீதையாக நடிக்க கரீனா கபூர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. பலரும் சீதையாக நடிக்க அதிக சம்பளம் கேட்டு தங்கள் மத நம்பிக்கையை கரீனா கொச்சைப்படுத்துவதாக விமர்சித்து வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு காலகட்டம் 8 முதல் 10 மாதங்கள் என்பதாலேயே அவ்வளவு பெரிய தொகையை கரீனா கேட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கரீனா கபூரிடம் கேட்கப்பட்டபோது தெளிவான பதில் எதையும் அவர் கூறவில்லை.

இந்த விவகாரத்தில் நடிகைகள் ப்ரியாமணி, டாப்ஸி, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கரீனா கபூருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE