19 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி

By செய்திப்பிரிவு

பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்த கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது.

'உழவன்', 'காதல் தேசம்', 'காதலர் தினம்', 'காதல் வைரஸ்' உள்ளிட்ட வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் கதிர். இந்தப் படங்கள் அனைத்தும் இப்போதும் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. கடைசியாக 2016-ம் ஆண்டு 'நான் லவ் ட்ராக்' என்ற கன்னடப் படத்தை இயக்கியிருந்தார்.

தமிழில் 2002-ம் ஆண்டு வெளியான 'காதல் வைரஸ்' படத்தைத் தயாரித்து இயக்கியிருந்தார் கதிர். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் புதிய படமொன்றை இயக்கவுள்ளார் கதிர்.

இந்தப் படத்தின் நாயகனாக புதுமுகம் கிஷோர் நடிக்கவுள்ளார். ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் பாடல்கள் பதிவுப் பணிகள் தொடங்கவுள்ளன.

கதிரின் முந்தைய படங்கள் போலவே இதுவும் காதலை மையப்படுத்திய கதையாக உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு, மும்பை மற்றும் வெளிநாட்டில் நடைபெறவுள்ளது. தற்போது கிஷோருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE