விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்தது ஏன்? - நயன்தாரா விளக்கம்

விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்ததற்கான காரணம் குறித்து நடிகை நயன்தாரா பதில் அளித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்படத்தின் புரமோஷனுக்காக விஜய் தொலைக்காட்சியில் ‘நெற்றிக்கண் ஸ்பெஷல்’ என்ற நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்டார்.

அதில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் நயன்தாரா பதிலளித்தார். அந்த வகையில் விக்னேஷ் சிவனிடம் காதலில் விழுந்தது ஏன் என்ற கேள்விக்கு நயன்தாரா அளித்த பதில்:

''காதலில் விழுவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. நாம் யாரை விரும்புகிறோம் என்பதுதான் முக்கியம். அவர் நம்மை எப்படிப் பார்த்துக் கொள்கிறார்? நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்? நாம் அவர்களுடன் இருக்கும்போது எவ்வாறு உணர்கிறோம்? இவையெல்லாம்தான் முக்கியம்.

விக்னேஷிடம் எனக்கு எல்லாமே பிடிக்கும். குறிப்பிட்டு இதுதான் பிடிக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. அவரைப் பற்றி நான் எங்கும் நிறைய பேசியதும் இல்லை. இதுவரை நான் பார்த்த ஆண்கள் அனைவருமே நாம் செய்யும் வேலையை, முன்னேற்றத்தைத் தடுக்க முயல்பவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஒரு குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், பெண்களாகிய நம்மால் குடும்பத்தையும் கவனிக்க முடியும், குழந்தைகளையும் வளர்க்க முடியும். வேலைக்கும் செல்ல முடியும். பெண்கள் அவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். விக்னேஷ் என் வாழ்க்கையில் வந்தபிறகுதான் நான் அதிகமாகப் பணிபுரிய ஆரம்பித்திருக்கிறேன். இது மிகப்பெரிய விஷயம். நான் செய்து கொண்டிருக்கும் வேலையைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று அவர் என்னை தினமும் உணர வைக்கிறார். அன்பை உணரச் செய்கிறார்''.

இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE