'புஷ்பா' சண்டைக்காட்சிகள் லீக்: படக்குழுவினர் அதிர்ச்சி

'புஷ்பா' சண்டைக்காட்சிகள் லீக்காகி இருப்பதால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் நடித்து வருகிறார்கள்.

கரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டதால், முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முதல் பாகம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால், தொடர்ச்சியாகப் படக்குழுவினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வந்துகொண்டே இருக்கிறது.

தற்போது படத்தின் முக்கியமான இடத்தில் வரும் சண்டைக்காட்சிகளின் சில பகுதிகள் இணையத்தில் லீக்காகிவிட்டன. இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். முன்னதாக முதல் பாடல் வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் லீக்கானதும் குறிப்பிடத்தக்கது.

'புஷ்பா' சண்டைக்காட்சிகள் எடிட்டிங் அறையிலிருந்து லீக்காகி இருக்கலாம் என்பது காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனை முன்வைத்துப் படக்குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும், சைபர் க்ரைமிலும் புகார் அளித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE